உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, அரியலூரில் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தர்வின் பிசியோதெரபி கிளினிக் சார்பில் நடைபெற்ற பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தொடக்கி வைத்தார். அரியலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயகுமார்ராஜா, பிசியோதெரபி மருத்துவர் செல்வராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய பேரணியானது பிரதான வழியாகச் சென்று மீண்டும் விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பிசியோதெரபி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.