அரியலூர் மாவட்டம், சேனாபதி கருப்புசாமி, இலைக்கடம்பூர் மாரியம்மன் கோயில் உள்பட 6 கோயில்களின் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5 ஆம் தேதி காலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு அதனைத் தொடர்ந்து கருப்புசாமி கோயில் கோபுரக் கலசம், நுழைவுவாயில் கோபுரக் கலசம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், இலைக்கடம்பூர் மாரியம்மன் கோயில், கீழகாவட்டாங்குறிச்சி விநாயகர் கோயில், மணகெதி வீரனார் கோயில், சிறுகடம்பூர் கருப்புசாமி கோயில், அழகாபுரம் முருகன் கோயில் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.