அரியலூர் அருகே விபத்து: சகோதரர்கள் பலி; மூவர் காயம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வேனும்,இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்  கொண்ட விபத்தில் அண்ணன், தம்பி  உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வேனும்,இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்  கொண்ட விபத்தில் அண்ணன், தம்பி  உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர்கள் பயாஸ் (24), ஜமீல் (26) இருவரும் சகோதரர்கள். இவர்களது தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதால், அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரை உள்ளிட்ட பொருள்களை தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் நபரிடம் ஒப்படைக்க புதன்கிழமை காலை பைக்கில் இருவரும் சென்றனர். 
அரியலூர் மாவட்டம். கீழப்பழுவூர் - சாத்தமங்கலம் இடையே சென்றபோது, அரியலூரில் நடந்த வளைகாப்புக்கு அய்யம்பேட்டையிலிருந்து 14 பேரை ஏற்றி வந்த வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  விபத்து நடந்த வேகத்தில் வேனும், பைக்கும் சாலையோர பள்ளத்தில் இறங்கி தீப்பற்றி எரியத் தொடங்கின.
இதையடுத்து வேனில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பினர். ஆனால், வேனின் அடியில் சிக்கிக் கொண்ட பயாஸ் எரிந்து உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஜமீலும் அதே இடத்தில் உயிரிழந்தார். வேனை ஓட்டி வந்த அய்யம்பேட்டை செல்வம் (55), வேனில் பயணம் செய்த சோமசுந்தரம் (65), ஜோதி (58) ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
தகவலறிந்த கீழப்பழுவூர் போலீஸார் மற்றும் அரியலூர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கீழப்பழுவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com