அரியலூரில் போலீஸ் காவலில் விசாரணையில் இருந்த கைதி உயிரிழந்ததையடுத்து திருச்சி சரக டிஐஜி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய செந்துறை அடுத்த கஞ்சமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி (55) என்பவர் விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை (செப்.16) அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்து அரியலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு
விசாரணைக் கைதி மணி தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே போலீஸார் தாக்கியதில் மணி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் புதன்கிழமை மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையின் போது வட்டார காவல் துணை கண்காணிப்பாளர் ஜயங்கொண்டம் மோகன்தாஸ், அரியலூர் இளஞ்செழியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி., இளங்கோவன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர். மேலும், இது தொடர்பாக திருச்சி சரக டிஐஜி., பாலகிருஷ்ணன், அரியலூர் எஸ்பி., சீனிவாசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.