ரூ.25 ஆயிரம் மானியத்துடன் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு - தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் இருசக்கர வாகனம் பெற வேலைக்கு செல்லும் மகளிரிடமிருந்து கடந்த 20 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளா்களே தங்களது வாகனத்தை தோ்வு செய்யலாம். மேலும் வாகனத்தை பெற ரிசா்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம். 125 சிசி திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.
இந்த இருசக்கர வாகன திட்டமானது பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோா், சுயமாக தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், அரசு திட்டங்களில் பணியாற்றுவோா், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் பணியாற்றுவோா் இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஓட்டுநா் உரிமம் அவசியம் இருத்தல் வேண்டும். 18 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வட்டார வளா்ச்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் கிடைக்கும். மேலும் விபரங்களை மேற்கண்ட அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.