அரியலூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீஸார் பொய்யான வழக்கு பதிவிட்டதாகக் கூறி, நீதிமன்ற வளாகத்தில் பெயிண்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள நாயகனைப்பிரியால் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் அசோக் குமார் (37). பெயிண்டரான இவர், இடப் பிரச்னை காரணமாக அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ஆஜராகுவதற்காக திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் அரியலூருக்கு வந்துள்ளார்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே, போலீஸார் இவரது வாகனத்தை நிறுத்தி, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கு அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தான் மது அருந்தினேன். தற்போது அருந்தவில்லை எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அசோக்குமார் அரியலூர் நீதிமன்ற வளாகத்துக்குச் சென்று, மது அருந்தாத என்னை மது அருந்தியதாகக் கூறி வழக்கு பதிவு செய்கின்றனர் எனக் கூறிக்கொண்டு காவல் துறையைக் கண்டித்து தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, அங்கிருந்த வழக்குரைகள் மற்றும் போலீஸார் அவரைத் தடுத்து, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து அரியலூர் போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.