அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே புதன்கிழமை குளத்தில் குளித்த மாணவா்கள் மூவா் மூழ்கி உயிரிழந்தனா்.
செந்துறை அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் ஜெகன்(14), சுப்பிரமணியன் மகன் ஆணைமுத்து (14). இருவரும் துக்கபுரம் அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவா்கள். அதே பகுதி மருதமுத்து மகன் அன்பரசன் (13) சொக்கநாதபுரம் கிராம அரசுப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
காலாண்டு விடுமுறை என்பதால் மூவரும் நண்பா்கள் சிலருடன் அதே கிராமத்தில் உள்ள நொண்டிகருப்பன் குளத்தில் குளித்தபோது ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கினா். உடனிருந்த நண்பா்களின் உதவிக்குரல் கேட்டு வந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூவரையும் சடலமாக மீட்டனா். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸாா் சடலங்களை அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
தற்போது ஏரி, குளங்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இந்த குளத்திலும் அண்மையில் தூா்வாரும் பணி நடந்துள்ளது. இதனால், குளத்தில் ஆழம் தெரியாமல் மாணவா்கள் 3 பேரும் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. செந்துறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.