ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மங்கானேரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜயங்கொண்டத்தை அடுத்த உத்திரக்குடி கிராமத்திற்கு அருகே, ஜயங்கொண்டம்-கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மங்கானேரி உள்ளது.
இந்த ஏரியானது கங்கைகொண்டசோழபுரம் அருகே ராஜேந்திரசோழனால் அமைக்கப்பட்ட பொன்னேரியை போன்று அதிக அளவு பரப்பளவை கொண்டது.
மழைக் காலத்தில் இந்த ஏரி கடல்போல் காட்சி அளிக்கும். இந்த நிலையில் மங்கானேரி தூர்பாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது தூர்ந்துபோய் உள்ளது.
இதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்காமல் உள்ளது. இந்த ஏரியில் மழைநீர் தேங்கினால், ஏரியை சுற்றியுள்ள கழுவந்தோண்டி, பெரியவளையம், அங்கராயன்நல்லூர், தேவமங்கலம், உதயநத்தம், சிலால், நாயகனைப்பிரியாள், வானதிரையான்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி
நீர்மட்டம் உயரும். விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு, ஏரியையும், ஏரிக்கு வரும் வரத்து வாய்க்காலையும் தூர்வார வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.