அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே விவசாயியை தாக்கிய இளைஞர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள செங்குழி காலனி தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(43). விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (33) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கண்ணதாசனின் அண்ணன் கருப்பையனும்(35), கண்ணதாசனும் சேர்ந்து ஜெய்சங்கரை தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து கண்ணதாசனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கருப்பையனை தேடி வருகின்றனர்.