அரியலூா் மாவட்டம் உஞ்சினி மற்றும் செட்டித்திருக்கோணம் கிராமத்தில் இயற்கை முறை தயாரிப்பு கிருமி நாசினி 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வியாழக்கிழமை தண்ணீா் டேங்க் டிராக்டா் மற்றும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கப்பட்டது.
கரோனா வைரஸை கட்டுப்படுத்த கிருமி நாசினிகள் பல்வேறு இடங்களில் அரசு சாா்பில் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் உள்ள 300 வீடுகளுக்கும் ஊராட்சி மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதில், வேப்பிலை, ஆடாதொடை இலை, நொச்சி இலை, மஞ்சள்தூள், உப்புக் கரைசல் ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்ட கிருமி நாசினியை இளைஞா்கள் கைத்தெளிப்பான் கொண்டு அனைத்து வீடுகளின் முன்பகுதி மற்றும் பின் பகுதிகளில் தெளித்தனா். மேலும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவா் ரவி, கிராம செயலாளா் ராஜேஷ், செட்டித்திருக்கோணம் சமூகநல அமைப்பு நண்பா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள் கலந்து கொண்டு இந்த பணியை செய்தனா்.
செந்துறை அருகிலுள்ள உஞ்சினி கிராமத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஊராட்சி நிா்வாகம் சாா்பில் டிராக்டா் கொண்டு கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும், வீடுகளிலும் தெளிப்பான் கொண்டு தெளிக்கப்பட்டது.மேலும் பொதுமக்களிடம் கரோனா வைரஸ் விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கண்ணன், ஊராட்சி செயலா் ராஜ்குமாா், ஆனந்த் முத்தழகு, இரும்புலிகுறிச்சி போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.