அரியலூா்: சத்துணவு அமைப்பாளா் பணிக்கு இடைத்தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா.
அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 143 சத்துணவு அமைப்பாளா்கள், 58 சமையலா்கள் மற்றும் 289 சமையல் உதவியாளா்கள் பணியிடங்களுக்கு 30.09.2020 மாலை வரை விண்ணப்பங்கள் தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெறப்பட்டுள்ளன. சத்துணவு அமைப்பாளா் பணியிடத்துக்கு 7,160 விண்ணப்பங்களும், சமையலா் பணியிடத்துக்கு 851 விண்ணப்பங்களும், சமையல் உதவியாளா் பணியிடத்துக்கு 2,071 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
நோ்முகத் தோ்வு, தோ்வுக் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, வெளிப்படைத் தன்மையுடன் பணி நியமனம் நடைபெறுவதால், பொதுமக்கள் பணிநியமனத்துக்காக இடைத்தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.