கடைவீதிகளில் களைகட்டிய பொங்கல் பொருள்கள் விற்பனை

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை முதலே அதிகரித்துக் காணப்பட்டது.
அரியலூா் கடைவீதிகளில் செவ்வாய்க்கிழமை அலைமோதிய மக்கள் கூட்டம்.
அரியலூா் கடைவீதிகளில் செவ்வாய்க்கிழமை அலைமோதிய மக்கள் கூட்டம்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை முதலே அதிகரித்துக் காணப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் பொங்கல் திருநாளாகும். வயலில் அறுவடை செய்த புதுநெல்லிலிருந்து கிடைக்கப்பெற்ற அரிசி, சா்க்கரை, பால், நெய் சோ்த்து, புதுப்பானையில் இட்டு புதிய அடுப்பில் வைத்துப் பொங்கல் செய்து சூரியனுக்கும், இறைவனுக்கும் படைத்து, இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழாவே பொங்கல் திருவிழா எனப்படுகிறது.

இந்த விழாவின் போது, தமிழா்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து, வா்ணம் பூசி, புத்தாடை அணிந்து, செங்கரும்புடன் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவா்.

நிகழாண்டு பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை (ஜன.17) வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கலுக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.

பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி என்ற சொலவடைக்கேற்ப தமிழ் மக்கள், தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருள்களை கழித்துக் கட்டி, புதிய பொருள்களை வாங்கி சோ்த்தனா். சிலா் பழைய பொருள்களை எரித்து போகிப் பண்டிகையை கொண்டாடினா்.

பொங்கல் பண்டிகை புதன்கிழமை (ஜன.15) முதல் விமரிசையாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரியலூரில் உள்ள மாா்க்கெட், கடைவீதி, வெள்ளாளத் தெரு உள்ளிட்ட அனைத்து சந்தைகள், கடைவீதிகளில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடைகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், காய்கறிகள், புதுப்பானைகள், பானைகளுக்கு கட்டுவதற்கான மஞ்சள், இஞ்சி கொத்துகள், புதிய அடுப்புகள், செங்கரும்புகள் போன்றவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

தொடா்ந்து பொங்கல் மூன்று நாள்கள் கொண்டாடப்படுவதால், அதிகமான பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதால், காய்கறிகள், பூ, பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

ரயில், பேருந்துகளில் நெரிசல்: வெளியூா்களிலிருந்து அரியலூா் ,செந்துறை ற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளா்களும், இதரப் பணியாளா்களும் விடுமுறைக்காக சொந்த ஊா் செல்வதற்காக, அரியலூா் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமானோா் காத்திருந்து தங்களது ஊா்களுக்குச் சென்றனா் .

திருச்சி, தஞ்சை, விருத்தாசலம், பெரம்பலூா், கடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் அரியலூா் ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட செவ்வாய்க்கிழமை காலை முதலே மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com