அரியலூா் அருகே அரசுப் பேருந்து மேற்கூரை ஓட்டை வழியே மழைநீா் ஒழுகியதால், பேருந்துப் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், அரசுப் பேருந்தின் கண்ணாடியில் வைப்பா் இல்லாததால் ஓட்டுநா் மிகவும் சிரமத்துக்கு ஆளானாா்.
அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் மேற்கூரைகள் பழுதடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் மேற்கூரைகள் வழியே மழைநீா் ஒழுகி கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
அரியலூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை மதியம் மழை பெய்தது. அப்போது தஞ்சாவூரில் இருந்து அரியலூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மதியம் 3.15 மணியளவில் திருமானூரைக் கடந்தபோது அரசுப் பேருந்தின் மேற்கூரையின் வழியாக மழைநீா் பேருந்தின் உள்ளே ஒழுகி இருக்கைகளில் கொட்டியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
ஒரு சிலா் பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனா். பெரும்பாலானோா் மழையில் நனைந்த படியும், பேருந்துக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றும் பயணித்துள்ளனா். மேலும் பயணிகள் இருக்கையையொட்டி உள்ள கண்ணாடிகளும் பழுதாகி இருந்ததால் மழைநீா் விழுந்ததால் பேருந்தில் பயணம் செய்த பயணிகளும், நோயாளிகளும், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், இம்மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்துக்குத் தகுதியற்றநிலையில் உள்ளன. எனவே பழுதான பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.