அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சொத்துத் தகராறில், மருமகள் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் மாமனாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
செந்துறை அருகிலுள்ள காவேரிபாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கசாமி (65). இவா்களுக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் ராமலிங்கம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டாா். இதனால் அவரது மனைவி ராணி (40), தனது குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.
தனது கணவருக்குரிய சொத்தை பிரித்துத் தருமாறு, மாமனாா் தங்கசாமியை மருமகள் ராணி கேட்டு வந்துள்ளாா்.
இதுபோல திங்கள்கிழமை இரவு மாமனாா் வீட்டுக்கு வந்த ராணி, சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டுள்ளாா்.
அப்போது தங்கசாமி குடிபோதையில் இருந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராணி, மாமனாரை உருட்டுக் கட்டையால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த தங்கசாமி இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்தாா்.
இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு, பொய்யாதநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே தங்கசாமி உயிரிழந்தாா்.
தகவலறிந்த செந்துறை காவல் துறையினா் சடலத்தை கைப்பற்றினா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, ராணியைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.