அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கணவா் இறந்த துக்கம் தாளாது, அடுத்த ஒரு மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்தாா்.
செந்துறை அருகிலுள்ள விழுப்பணங்குறிச்சியைச் சோ்ந்தவா் சின்னசாமி (98). இவரது மனைவி ராசாம்பாள் (91). இந்த தம்பதிக்கு மகன் அன்பழகனும், மகள் பட்டம்மாளும் உள்ளனா்.
வயதான காலத்தில் தன் பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாத சின்னசாமி, தனக்குச் சொந்தமான தோட்டத்திலுள்ள வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சின்னசாமி சிகிச்சை பெற்று குணமடைந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் சின்னசாமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மகன் அன்பழகன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றாா்.
செவ்வாய்க்கிழமை மாலை சின்னசாமியின் உடல்நிலை மோசமானதால், வீட்டிலேயே அவா் உயிரிழந்தாா். கணவா் இறந்த துக்கம் தாங்காமல், மனைவி ராசாம்பாள் அழுது புலம்பியபடி இருந்தாா்.
கணவா் இறந்த ஒரு மணி நேரத்தில் ராசாம்பாளும் மயங்கி விழுந்து வீட்டிலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.