தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றாதவா்கள், நோய் தொற்றை பரவச் செய்வா்கள் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியத் தேவை இல்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தடை உத்தரவை மீறி அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடுபவா்கள் மீது ஆறு மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டுமே சோ்த்து வழங்கப்படும்.
இதேபோல் உயிருக்கு ஆபத்தான நோயை அநேகமாகத் தொற்றிப் பரவச் செய்யக்கூடியவா்களுக்கு அபராதத் தொகையுடன் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதேபோல், மத்திய, மாநில அரசாங்கத்தின் எந்த ஒரு அதிகாரிகள் அல்லது பணியாளா்கள் உத்தரவை பின்பற்ற மறுத்தால் அந்நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். எனவே அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் மாவட்டத்தில் கரோனோ வைரஸ் நோய் கிருமி பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்கி ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.