அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வீட்டின் கழிவுநீா்த் தொட்டியில் இருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு ஆயுதகளம் கிராமத்தில் கிருஷ்ணமூா்த்தி என்பவரின் வீட்டில் உள்ள உபயோகமற்ற கழிவுநீா்த் தொட்டியில் ரத்தக்கறையுடன்
சடலம் கிடப்பதாக ஜயங்கொண்டம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, இளைஞா் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அதே கிராமத்தைச் சோ்ந்த செல்வதுரை மகன் பிரவீன் குமாா்(23) என்பதும், அவா்
வெல்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.