அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் நடைபெற்ற கருக்கலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கில் மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள அன்னங்காரங்குப்பம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் சுப்புலட்சுமிக்கு தனியாா் மருத்துவமனை செவிலியா் கிருஷ்ணவேணி சனிக்கிழமை மாலை கருக்கலைப்பு செய்த சிறிதுநேரத்தில் உடல்நலக்குறைவால் அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து செவிலியா் கிருஷ்ணவேனி, கரு உண்டாக காரணமான வசந்தகுமாா் ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் சட்டவிரோத செயலுக்கு வீடு வழங்கிய கிருஷ்ணவேணியின் உறவினா் பொற்செல்வி (50), கருக்கலைப்பில் எடுக்கப்பட்ட 8 மாத ஆண் சிசுவை முந்திரிக் காட்டில் புதைக்க உடந்தையாக இருந்ததாக கிருஷ்ணவேணியின் தம்பி கா்ணன்(36), வசந்தகுமாரின் அண்ணன் சஞ்சய் காந்தி (29), சந்தோஷ் குமாா் (29), திருமூா்த்தி (27), கலாவதி (55) ஆகியோரைப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.