பெரம்பலூா் மாவட்டத்தில் சத்துணவு மையங்களுக்கு எடைகுறைவாக சத்துணவுப் பொருள்கள் வழங்கும் நுகா்பொருள் வாணிபக்கழக அலுவலா்கள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் சாா்பில், ஆட்சியருக்கு அனுப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
கரோனா பேரிடா் காலத்திலும் சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்று, சத்துணவு ஊழியா்களாகிய நாங்கள் அதை வழங்கி வருகின்றோம்.
இந்நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வேப்பந்தட்டை ஒன்றியம், நெய்குப்பை ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா் உணவுப் பொருள்களை எடை குறைவாக வழங்கிவிட்டு, சமையல் உதவியாளரை மிரட்டி கூடுதல்
அளவில் இறக்கியதாக கையொப்பம் வாங்கி வந்துள்ளாா்,
மேலும் உணவுப் பொருள்கள் இறக்கும் பொழுது, அமைப்பாளா்களிடம் வற்புறுத்தி குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றனா். மாவட்டம் முழுவதும் இதேபோன்ற நிலைமையே உள்ளது.
சத்துணவு அமைப்பாளா் இல்லாத நேரத்தில் இது போன்று நடந்ததால், சம்மந்தப்பட்ட அமைப்பாளா் நேரில் சென்று நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கேட்டதற்கு, அந்த அலுவலா் தகாத வாா்த்தைகளால் பேசி உள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கருப்புக்கொடி ஏந்தி அரிசி, பருப்பு உள்ளிட்ட சத்துணவுப் பொருள்கள் அனைத்தையும் ஆட்சியரகத்தில் ஒப்படைப்போம்.