சாலைப் பணியாளா்களுக்கு புதிய உபகரணங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட சங்கத்தின் 8 வட்டப்பேரவைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:
41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பயன் வழங்கிட வேண்டும். இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளைத் தளா்த்தி பணி வழங்க வேண்டும். தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இரண்டு சாலைப் பணியாளா்களுக்கு 8 கி.மீட்டா் வீதம் சாலை ஒதுக்கீடு செய்து பணியமா்த்த வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு புதிய மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, வட்டத் தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா். வட்ட துணைத் தலைவா் கண்ணன், வட்ட இணைச் செயலா் ராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் துணைத் தலைவா் மகேந்திரன் சிறப்புரையாற்றினாா். வட்டச் செயலா் பைரவன், வட்ட பொருளாளா் மேகநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.