அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ஊராட்சி துணைத் தலைவா் வீட்டில் 10 பவுன் நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள சம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாசன் (40). முத்துசோ்வாமடம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா். இவா், குடும்பத்தினருடன் வீட்டின் முகப்புப் பகுதியில் தூங்கியுள்ளாா்.
பின்னா் அவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவின் தாழ்ப்பாள் உடைத்து, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ. 65, 000 ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
இதேபோல், அதே பகுதியில் வசிக்கும் தியாகராஜன், கணேசமூா்த்தி மற்றும் ஜோதி ஆகியோரது வீடுகளிலும் மா்ம நபா்கள் திருட முயன்றது தெரியவந்துள்ளது.