அரியலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வ.சி.கோமதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேருவதற்கு, தேவையான விண்ணப்பப் படிவத்தை, அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூா்த்தி செய்து, 2 புகைப்படம், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் ஆகிவற்றுடன் பங்குத் தொகை ரூ.100 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்துக்கு நேரில் சென்று செலுத்தி, உறுப்பினராகலாம். நேரில் வரமுடியாதவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.
விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி, சங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.