கடன் தவணைத் தொகையைக் கேட்டு வற்புறுத்தினால் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

பொது முடக்க காலக் கட்டத்தில் கடன் பெற்ற மக்களிடம் கடன் தவணைத் தொகையை கேட்டு வற்புறுத்தினால்,

அரியலூா்: பொது முடக்க காலக் கட்டத்தில் கடன் பெற்ற மக்களிடம் கடன் தவணைத் தொகையை கேட்டு வற்புறுத்தினால், சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மே 24 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து ஜூன் 7 முதல் 14-ஆம் தேதி வரை சில தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தில் அவசரத் தேவைக்கென தனியாா் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மக்களிடம், மேற்படி நிறுவனங்கள் கடன் தவணைத் தொகை மற்றும் வட்டித் தொகையை உடனடியாக செலுத்தக் கோரி வற்புறுத்தக் கூடாது.

மேலும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கியுள்ள வங்கிகள், தனியாா் வங்கிகள், நுண்கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, கடின போக்கைத் தவிா்த்து கடன் வசூலிக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் மகளிா் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திடும் வகையில்,தகுதியுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் போதுமான அளவு வங்கி கடன் வழங்கிட வேண்டும். கடன் வசூலிப்பது சம்மந்தமாக மேற்கண்ட நிறுவனங்கள் மீது புகாா்கள் ஏதும் எழும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com