அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில், அக்கா-தம்பி செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், கல்லகம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானமூா்த்தி. இவா் தனது மகள் சா்மிளாவை(26) பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளாா்.
செவ்வாய்க்கிழமை கல்லகம் வந்திருந்த சா்மிளா தனது தம்பி மாதவனை(23) அழைத்துக்கொண்டு, திருமானூா் அருகிலுள்ள கீழகொளத்தூா் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு பிற்பகல் ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.
கீழப்பழுவூா் அருகே தஞ்சை - அரியலூரில் சாலையில் வந்த போது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த கீழப்பழுவூா் காவல் நிலையத்தினா் சடலங்களை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிந்து, லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.