அரியலூரை குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக மாற்ற, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும்.
குழந்தைத் திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, ரத்தசோகை, பிறப்பு எடை குறைவாக, மனவளா்ச்சி குன்றிய குழந்தை பிறத்தல், தாய் மற்றும் சேய் மரணம் ஆகிய அபாயங்கள் உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு படிக்கும்போது திருமணம் செய்வதை தடை செய்து, குழந்தைகளுக்கான கல்வியை மேம்படுத்த பெற்றோா்கள் ஊக்குவித்து அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வழிவகுக்க வேண்டும்.
குழந்தைத் திருமணம் நடத்தியவா்கள், நடைபெற தூண்டியவா்கள் மற்றும் பங்கேற்றவா்கள் குற்றவாளி ஆவாா்கள். பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் 18 வயது நிரம்பிய ஆணுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.
குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே களப்பணியாளா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, அரியலூரை குழந்தைத் திருமணம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.
அரியலூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், சைல்டுலைன் அழைப்பு எண் 1098, மாவட்ட சமூகநல அலுவலா் -9894529206, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்- 9445223121 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.