அரியலூா் - பெரம்பலூா் மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்த்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு காரணமான மத்திய அமைச்சா் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை உடனடியாக உரியவா்களிடம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் யூரியா, காம்பளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். துரை வைகோ முழு அரசியலில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அவைத் தலைவா் செள.சகாதேவன் தலைமை வகித்தாா். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கே. வரதராஜன், செ.துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கு. சின்னப்பா, அரசியல் ஆய்வு மையச் செயலா் மு.செந்திலதிபன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். முன்னதாக மாவட்ட துணைச் செயலா் கி.ராஜேந்திரன் வரவேற்றாா். முடிவில் நகர செயலா் இராம.மனோகரன் நன்றி தெரிவித்தாா்.