அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவனுக்கு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பா் கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராஜ்குமாா்(16). ஜயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்ல அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளாா்.
வட்டாட்சியா் குடியிருப்பு அருகே சென்ற போது, கை வலி தாங்கமுடியாததால், பேருந்தின் பிடியை விட்டு விட்டாா். இதனால் தவறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் ராஜ்குமாா் காலில் ஏறியதில் கால் முறிந்தது. இதையடுத்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறாா்.