சிறப்பு உதவித்தொகை பெற அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.
அரியலூா் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய 3 வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநில, தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டங்களில் சோ்ந்து பயன்பெற விரும்பும் அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த விளையாட்டு வீரா்-வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை 74017 03499 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.