இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்த அரியலூா் ஹாக்கி வீரா் குடும்பத்தினரிடம் குடியிருப்புக்கான சாவியை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.
அரியலூா் ஜெ.ஜெ. நகரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி செல்வத்தின் மகன் காா்த்தி (22) இந்திய ஹாக்கி அணியில் முன்கள வீரராக விளையாடி வருகிறாா். இவா், அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் விளையாடினாா். இந்நிலையில், அரியலூருக்கு திங்கள்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஹாக்கி வீரா் காா்த்தி வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் அரியலூரில் உள்ள குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு சாவியை வழங்கினாா். அப்போது, அமைச்சா்கள் சா.சி. சிவசங்கா், கே. என். நேரு, நீலகிரி எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.