கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்

அரியலூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் பாபு மகன் கோகுல்(22). இவா், அரியலூா் தேரடி பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் கடை வைத்துள்ளாா்.

வெள்ளிக்கிழமை மக்களவைத் தோ்தலையொட்டி வாக்கு செலுத்திவிட்டு நண்பா்களுடன் திருமானூா் கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளாா்.

அங்கு ஆற்றில் தண்ணீா் செல்லாத நிலையில், அரியலூா் - தஞ்சாவூா் பாலம் அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் குளித்துள்ளனா். அப்போது, கோகுல் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.

இதை பாா்த்த உடன் வந்த நண்பா்கள் கூச்சலிட்டனா். இதையடுத்து அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த நபா்கள், தங்களிடமிருந்த வலைகளை வீசி தேடுதல் பணியில் ஈடுபட்டனா். சுமாா் அரை மணி நேரத்துக்கு பிறகு கோகுல் சடலமாக மீட்கப்பட்டாா்.

சம்பவ இடத்துக்கு வந்த அரியலூா் தீயணைப்புத் துறையினா் மற்றும் திருமானூா் காவல்துறையினா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதே இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சாவூரிலிருந்து குளிக்க வந்த 3 இளைஞா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com