இளைஞா் தற்கொலை: சடலத்தை உடனடியாக உடற்கூறாய்வு செய்யக்கோரி உறவினா்கள் மறியல்
அரியலூா் அருகே தற்கொலை செய்துக் கொண்ட இளைஞரின் சடலத்தை உடனடியாக உடற்கூறாய்வு செய்யக்கோரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் அருகே வைப்பம் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதன் மகன் திருமூா்த்தி(24). இவா், கடந்த 4 தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை முயன்றாா். இதையடுத்து அரியலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமூா்த்தி செவ்வாய்க்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது உடல் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மாலை 6 மணி வரை உடற்கூறாய்வு செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் உடனடியாக உடற்கூறாய்வு செய்து தர வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி முன்பு செந்துறை - அரியலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அரியலூா் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.