தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள முழு கடையடைப்பு போராட்டத்திற்கு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட அமராவதி நதிநீர் பாசன இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் லிங்கம்சின்னசாமி, தலைவர் மாரப்பன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வறட்சி, குடிநீர் பிரச்னை நிலவி வரும் நிலையில் நதிகள் தூர்வாரப்படவில்லை. அமராவதி அணையை தூர்வாரக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக போராடியும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைத்திடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில் புதுதில்லியில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வரும் 25-ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட அமராவதி நதிநீர் பாசன இயக்கம் முழு ஆதரவு தெரிவிக்கிறது.