சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் காலபைரவருக்கு அண்மையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
புன்னம்சத்திரம் புன்னைவன நாதர் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனாக தேங்காய், நீர்பூசணிக் காய்களில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். இதேபோல, நத்தமேடு சிவன்கோயிலில் உள்ள காலபைரவருக்கும், நன்செய்புகழூர் மேக பாலீஸ்வரர் கோவயிலில் உள்ள காலபைரவருக்கும் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோயிலில் உள்ள கால பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.