உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டு அவசியமானது என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ்.
கரூர் மாவட்டம் புலியூரில் இராணி மெய்யம்மை பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பெரம்பலூர் மண்டல அளவிலான குடியரசு தின விளையாட்டுப்போட்டிகளை கொடியசைத்து தொடக்கி வைத்து மேலும் அவர் பேசுகையில், படிக்கும் பருவத்தில் மாணவ, மாணவிகள் விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உடல்நலம் பேணினால் மன நலம் மிகுந்து கல்வியில் சிறந்து விளங்க முடியும். படிக்கும் பருவத்தில் விளையாட்டு பழக்கத்தை ஏற்படுத்தினால் விளையாட்டினால் உடல் பலமாகுவதுடன் மனமும் பலமாகிறது. இதன் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த முடியும். விளையாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக கல்விக்காக அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் வழங்கி வருகிறது. இந்த அரிய வாய்ப்பினை ஒவ்வொருவரும் பயன்படுத்தி உடல்நலம் பேணி நோயற்ற சமுதாயம் உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.
போட்டியில் பெரம்பலூர், அரியலூர், கரூர், உடையார்பாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதனமைக்கல்வி அலுவலர் அய்யண்ணன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் சக்திவேல், உடற்கல்வி ஆசிரியர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.