அமராவதி ஆற்றில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி க. பரமத்தி ஒன்றிய திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை சின்னதாராபுரத்தை அடுத்த ஒத்தமாந்துரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திமுக ஒன்றியச் செயலர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நன்னியூர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீருக்கு மிகவும் சிரமமான நிலை உள்ளது. அமராவதி ஆற்றில் தற்போது 54 அடி தண்ணீர் இருப்பு இருந்தும் திறந்துவிட நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரவக்குறிச்சி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் முரளீதரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.