கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், முன்னூர் ஊராட்சியில் ஆதியப்பகவுண்டவலசு காலனியில் குடிநீர் மோட்டாரைப் பழுதுபார்க்க வலியுறுத்தி, ஒன்றிய அலுவலகத்தில் திங்கட்கிழமை அப்பகுதியினர் மனு அளித்தனர்.
முன்னூர் ஊராட்சியில் ஆதியப்பகவுண்டவலசு காலனியில் 45-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் குடியிருப்பு வீடுகள் அருகே 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சின்டெக்ஸ் தொட்டி ஆகியவை மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் சின்டெக்ஸ் தொட்டிக்கு நீர் அனுப்பும் மின் மோட்டார் கடந்த ஒரு மாதத்துக்கு முன் பழுதானது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்களுக்கு மனு கொடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை அப்பகுதியினர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனர்.