கரூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கரூர் மாவட்டத்துக்கான புதிய திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
விழாவில் முதல்வர் பேசுகையில், மாயனூர் காவிரிஆற்றின் தென்கரை, கட்டளை மேட்டுவாய்க்கால் உள்ள பகுதியில் பழைய பாலம் அருகே ரூ. 7 கோடியில் புதிய பாலம் கட்டப்படும். சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித் தரப்படும். தாந்தோணி ஒன்றியத்தில் 64,350 பேர் பயன்பெறும் வகையில் புதிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும்.
பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகள் அதிகளவில் உள்ளதால் அக்காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக தாந்தோணிமலையில் காவல் நிலையம் உருவாக்கப்படும். கரூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் புறவழிச்சாலைக்கு புதிதாக அணுகு சாலை அமைக்கப்படும். குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் கட்ட பரிசீலிக்கப்படும். கரூரில் கோவை-ஈரோடு சந்திப்பு சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்படும். மேலும் வைரமடை-தொப்பம்பட்டி இடையே புதிய மேம்பாலம் மற்றும் மணப்பாறை-குஜிலியம்பாறை சாலையில் புதிய உயர்மட்டப்பாலம், புகழூரில் காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆய்வு செய்யப்படும் என்றார்.