கரூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.
கரூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தென் மாவட்டங்களுக்குச் செல்ல, கோவை - நாகர்கோவில் விரைவு ரயில், மங்களூர் - தூத்தூக்குடி விரைவு ரயில் என குறிப்பிட்ட அளவில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால் இந்த ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது,
கோடை விடுமுறை என்பதால் கரூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ர்பில் தென் மாவட்ட பயணிகள் உள்ளனர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறியது: பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பின்னர் கரூரில் இருந்து பேருந்தில் நெல்லை செல்ல ரூ.300 செலவாகும் நிலையில், விரைவு ரயிலில் ரூ.105 மட்டுமே செலவாகும்.
மேலும் பகலில் ஈரோடு, கோவையில் இருந்து இயக்கப்படும் பயணிகள் ரயிலில் வெறும் ரூ.55 மட்டுமே. கரூரில் பணியாற்றும் தென் மாவட்ட மக்களில் 90 சதவீதத்தினர் கூலித்தொழிலாளர்கள். எனவே கரூரில் இருந்து கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டால் தென் மாவட்ட பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றனர்.