பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள் என்றார் நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு.
கரூரில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழக மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் திடீரென பேருந்துக் கட்டணத்தை எடப்பாடி அரசு உயர்த்தி மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தை ஆளும் அரசுக்கு மக்கள் மீதோ, மக்களின் பிரச்னைகள் மீதோ அக்கறையில்லை. பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கியது எதற்காக என்றால் மதுபோதையில் மயங்கிக் கிடக்கும் தங்களது கணவர்களை அழைத்து வருவதற்காகத்தான். தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டுமென்றால் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
திமுக மாவட்டச் செயலர் நன்னியூர்ராஜேந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னசாமி, முன்னாள் தலைவர் பேங்க் கே. சுப்ரமணியன், திமுக கொள்கைப் பரப்புச் செயலர் புதுகை விஜயா, காங். மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.