கரூர் அருகே போலி மதுபானம் தயாரித்து விற்ற இருவரை கைது செய்தனர்.
கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் அருகே அய்யனாங்காடு என்ற இடத்தில் வீட்டு மண்பானை சமையல் கூடம் என்ற பெயரில் சிலர் போலி மது தயாரித்து விற்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரனுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்த.
இதையடுத்து மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கேபிஎஸ். ஜெயச்சந்திரன் தலைமையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சந்தோஷ்குமார், வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் குருநாதன் ஆகியோர் தனிப்படையுடன் சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு போலி மதுபானம் தயாரித்த அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல்(49), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் (40) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கார், ரூ.10,000 ரொக்கம், 2 இருச்சக்கர வாகனங்கள் மற்றும் போலி மது தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கேரளத்தைச் சேர்ந்த ராஜுவை தேடி வருகிறார்கள்.