பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல வெள்ளிக்கிழமை கரூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
கரூர் மாவட்டம் தொழில் நகரம். வீட்டு உபயோக ஜவுளித்தொழில், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி என பல்வேறு தொழில்கள் நடைபெறுவதால் இந்த தொழில்களில் உள்ளூர்வாசிகள் மட்டுமன்றி தென்மாவட்டங்களான மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.
தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் வணிக நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதால் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திரளாக தங்களது சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமப்படாமல் சென்றனர்.