தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்டப் பிரிவின் சார்பில் மார்ச் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், கையுந்துபந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கல்லூரி, தனியார் நிறுவனங்களில் பயிலும் பணிபுரியும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம்.
தடகளத்தில் ஆண்களுக்கு 100 மீ., 800 மீ., 5, 000 மீ., ஓட்டப் பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளும், பெண்களுக்கு 100 மீ., 800 மீ., 3, 000 மீ., ஓட்டப்பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் வயது வரம்பின்றி கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். போட்டி நடைபெறும் நாளன்று காலை 8.30 மணிக்கு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வந்து பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாலநாயக்கன்பட்டிகிராமம், நீதிமன்றம் பின்புறம், தான்தோன்றிமலை 639 005 என்ற முகவரியில் நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.