கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வகத்திற்கு ரூ.50 லட்சத்தில் ரத்த பகுப்பாய்வு உபகரணத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கரூர் மாவட்டம் பால்ராஜபுரம் ஊராட்சி, ஆண்டிபாளையம் பகுதியில் ரூ.23.10 லட்சம் மதிப்பிலும், குளித்தலை நகராட்சிப் பகுதியில் ரூ.22.90 லட்சம் மதிப்பிலும் மற்றும் இனுங்கூரில் ரூ.30.88 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்தகக் கட்டங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பில் பொது ஆய்வகத்திற்கு ரத்த பகுப்பாய்வு உபகரணம், குளித்தலை அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலான பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்து கண்டறியக்கூடிய மெமோகிராம் உபகரணம், மாநில அரசு நிதி ஆதாரத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 160 கே.வி.ஏ. மின்னாக்கி மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிதியின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் சி.டி.ஸ்கேன் உபகரணம் ஆகியவற்றை அமைச்சர் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து மைலம்பட்டி, பஞ்சப்பட்டி பகுதியில் பல்வேறு புதிய பணிகளுக்கு பூமிபூஜைகளைத் தொடக்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.3.41கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய பணிகளைத் தொடங்கியும் வைத்தார் அமைச்சர்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம. கீதா மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மருத்துவப் பணிகளின் இணை இயக்குநர் விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர்(பொ) இளங்கோவன், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் வை. நெடுஞ்செழியன், கண்ணதாசன், பொரணி கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.