கரூர் அருகே தனியார் பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.26.36 லட்சம் திருடிய இருவரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கரூர் அருகே உள்ள காக்காவாடியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 3 ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே பணப்பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.26.36 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக பள்ளி முதல்வர் சாம்சன் அளித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து திருடர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் பள்ளியில் பூட்டை உடைத்து திருடிய கன்னியாகுமரி மாவட்டம் கொல்லம்விலையைச் சேர்ந்த வினோத்குமார்(38), திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் லெட்சுமண பெருமாள்(25) ஆகியோரைக் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம் ரூ.23.50 லட்சத்தை மீட்டனர். மீதி பணமான ரூ.2.86 லட்சத்தை ஊர் சுற்றி செலவழித்தது தெரியவந்தது. கைதான இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.