விஜயதசமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கரூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் குவிந்தனர்.
தமிழக அரசு விஜயதசமியான வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என அறிவித்திருந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை கரூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. கரூர் வெங்கமேடு அன்னை வித்யாலாயா பள்ளி மற்றும் பண்டரிநாதன் கோயில் தெருவில் உள்ள சரஸ்வதி அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் பசுபதிபாளையம் லோட்டஸ் ஸ்கிட்ஸ் மாண்டிசோரி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் காலை முதலே குவிந்தனர்.
அப்போது குழந்தைகளை நோட்டுகளில் ஓம் எழுதியும், சரஸ்வதி ஸ்லோகம் பாடியும் சேர்த்தனர். மேலும் குழந்தைகளை பள்ளி மாணவ, மாணவிகள் ஆடிப்பாடி வரவேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் எஸ். சாரதா மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் அனைத்து அரசு துவக்கப்பள்ளிகளிலும் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது.