காவிமயமாக்கும் பாஜகவின் கனவுகளைத் தூக்கியெறிய வேண்டும் என கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மாவட்டச் செயலர் நன்னியூர்ராஜேந்திரன், மாநில விவசாய அணிச் செயலர் சின்னசாமி, மாநில சட்டத்துறை இணைச் செயலர் வழக்குரைஞர் மணிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கருப்புப் பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வைப்புத்தொகை செலுத்துகிறோம் என பொய் வாக்குறுதிகளைக் கூறி மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடியின் காவிமயமாக்கும் கனவுகளை தூக்கியெறிய வேண்டும், வரும் 15-ம் தேதி விழுப்புரத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கரூர் மாவட்டத்தில் இருந்து திரளாகச் சென்று பங்கேற்பது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் கவனமுடன் செயல்படுவது,
மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியும் கடந்த ஜூலை 19-ம்தேதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்லும்
வகையில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டிப்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது, விலை உயர்வை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடந்து வருவதைக் கண்டித்தும், இந்த அரசை பதவி விலகக் கோரியும் வரும் 18-ம்தேதி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.