தமிழக அரசைக் கண்டித்து கரூரில் செவ்வாய்க்கிழமை திமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
குட்கா ஊழல், முட்டை ஊழல், மணல் கொள்ளை, புதிய பேருந்துகள் வாங்கியதில் ஊழல் என பல்வேறு ஊழலில் சிக்கியுள்ள தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், கரூரில் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாவட்டச் செயலாளர் நன்னியூர ராஜேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கேசி.பழனிசாமி, முன்னாள் அமைச்சரும், மாநில விவசாய பிரிவுச் செயலரும் ம.சின்னசாமி, மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்குரைஞர் மணிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர், ஒன்றியச் செயலாளர்கள் கந்தசாமி, கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் மாநில அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.