வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்றத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2019 பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கடந்த 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனவே, வரும் 2019 ஜனவரி 1 ஆம் தேதியில் 18 வயது நிரம்பிய, தகுதியுள்ள அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் 6 இல் மனுக்கள் அளித்திடலாம்.
வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் இருந்து குடிபெயர்ந்த, முகவரியில் இல்லாத மற்றும் இறந்துபோனவர்களின் பெயர்களைப் படிவம் 7 இல் மனுக்கள் அளித்து நீக்கம் செய்திடலாம். வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்திட படிவம் 8இல் மனுக்கள் அளித்திடலாம். ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் இடம் பெயர்ந்தோரின் முகவரியை மாற்றம் செய்திட படிவம் 8ஏ-இல் தகுந்த ஆவணங்களுடன் வாக்குச்சாவடி மையங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கரூர், குளித்தலை நகராட்சி அலுவலகம், கரூர், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் அக்.31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.23) அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் மனுக்கள் அளித்தும் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.