மக்களவை தேர்தலுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி செவ்வாய்க்கிழமை அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் த.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
வரும் 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்டத்திற்கு 1,390 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,560 வாக்குச்சீட்டு பொருத்தும் இயந்திரங்கள் ஆகியவற்றை வாக்குப்பதிவின்போது பயன்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணிக்காக பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் இருந்து, பொறியாளர் ஜெய்பிரகாஷ் கெளதம் தலைமையில் 14 பொறியாளர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. பணிகளை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மின்னணு இயந்திரம் சரிபார்ப்பு பணிக்காக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் த.குமரேசன், தேர்தல் வட்டாட்சியர் பெ.விஜயகுமார், வட்டாட்சியர் (கரூர்) ஈஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.