குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இதில், தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சிக்குட்பட்ட கத்தாளபட்டியைச் சேர்ந்த கிராமமக்கள் காலிக்குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்நிலையில் மணவாடி ஊராட்சி சார்பில் எங்கள் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் தற்போது தண்ணீர் இல்லை. வழக்கமாக விநியோகிக்கப்படும் காவிரிக் குடிநீரும் போதிய அளவில் கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் கடந்த இரு மாதங்களாக மிகவும் அவதியுற்று வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளைச் சீரமைத்து சீரான வகையில் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல ஜெகதாபி மோளகவுண்டனூரைச் சேர்ந்த கிராமமக்களும் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பது: எங்கள் ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள்பகுதியில் ஜெகதாபி ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அனைத்தும் பழுதாகிவிட்டன. காவிரிக்குடி நீரும் முறையாக வருவதில்லை. எனவே எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் கூறியுள்ளனர்.
தாட்கோ மூலம் நிதியுதவி கோரி மனு: கரூர் டாக்டர் அம்பேத்கர் மக்கள் நலச்சங்கத்தினர் வழங்கிய மனுவில், செருப்பு தைக்கும் தொழிலாளர்களாகிய நாங்கள் தொழிலை மேம்படுத்த தாட்கோவில் கடன் கேட்டு 55 பேர் விண்ணப்பித்திருந்தோம். இதையடுத்து தாட்கோ துணை மேலாளர் நேரில் வந்து விசாரணை நடத்தி விட்டுச்சென்றார். தாட்கோ மூலம் கடனுதவி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.